விஎச்பி யாத்திரை தடுக்கப்படும்: ஒரிஸ்ஸா அரசு
டெல்லி: நக்ஸலைட்டுகளால் கொலை செய்யப்பட்ட விஎச்பி தலைவரின் அஸ்தியுடன் அந்த அமைப்பு நடத்த உள்ள யாத்திரை தடுத்த நிறுத்தப்படும் என்று ஒரிஸ்ஸா அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ள துமுடிபந்த் ஆஸ்ரமத்தில் கடந்த 23ம் தேதி அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். அப்போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி (85), உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை கிருஸ்துவர்களுக்கு எதிராக வெறியாட்டம் போட்டன. இதில் 3 பேர் கொலையாயினர். பல சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. ஏராளமான கிருஸ்துவர்கள் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் அஸ்தியோடு வரும் 7ம் தேதி மாநிலம் தழுவிய யாத்திரை நடத்தப்படும் என்று விஎச்பியின் பொதுச் செயலாளர் பிரவீன் தொக்காடியா அறிவித்துள்ளார்.
இந்த இதனால் அங்கு மேலும் பதட்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஜே.எம்.பாஞ்சல் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரிஸ்ஸா மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். யாத்திரையை தடுக்கும் முயற்சிகளை அரசு முழு வீச்சில் மேற்கொள்ளும்.
கந்த்மால் மாவட்டத்தில் விஎச்பியினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கும் வகையிலும், அங்கு சட்டம் ஒழுங்கை காக்கும் வகையிலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது என்று உறுதியளித்தார்.
ஒரிஸ்ஸாவில் பாஜக ஆதரவோடு பிஜூ ஜனதா தளத்தின் சார்பில் நவீன் பட்நாயக் ஆட்சியில் இருப்பது குறி்ப்பிடத்தக்கது.