கிருஸ்துவர்களுக்கு மட்டும் உதவுவதா?-ஜெ கேள்வி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரிஸ்ஸாவில் கிருஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு காலம் ஆகியும், இன்னும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது துரதிஷ்டவசமாகும். இந்த சம்பவங்களால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.
அந்த அடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரிஸ்ஸாவில் மத பிரச்சினையின்போது பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது வரவேற்க கூடியது.
அதே நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதத்தாலும், மதவாதத்தாலும் சுமார் 3 லட்சம் இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். காஷ்மீர் இந்துக்கள் தாங்கள் பிறந்த மண்ணான சொர்க்க பூமியை விட்டு ஜம்மு பகுதியிலும், டெல்லி நகரிலும் சிதறுண்டு பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
5,000 ஆண்டு கால பூர்வீகம் கொண்ட காஷ்மீர் இந்துக்களின் வீடுகள் தீவிரவாதிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டன. மத அடிப்படைவாத கலாசாரம் காரணமாக காஷ்மீரில் நிலவிய மதச்சார்பின்மை கலாசாரம் அழிக்கப்பட்டு விட்டது.
காஷ்மீர் பண்டிட்கள் என்று அழைக்கப்படும் அங்குள்ள இந்துக்கள் கல்வியில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியவர்கள்.
1990களில் சொந்த மண்ணிலேயே அவர்கள் அனாதையானார்கள். அவர்களின் சொத்துக்களை தீவிரவாத குழுக்கள் சூறையாடி அள்ளிச் சென்றன. ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் கொடூரமாக முறையில் கொல்லப்பட்டார்கள்.
அங்கிருந்து தப்பிய சுமார் 3.5 லட்சம் பேர் டெல்லி மற்றும் ஜம்முவில் போதிய இருப்பிட, சுகாதார வசதிகள் இன்றி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
தங்களுக்கு வழங்கப்படும் குறைந்த அளவு ரேஷன் பொருட்களை வாங்கி, என்றாவது ஒருநாள் பிறந்த மண்ணுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். காஷ்மீர் இந்துக்களை போல சீக்கியர்களும், தீவிரவாத மற்றும் மத அடிப்படைவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
ஒரிஸ்ஸாவில் கிருஸ்தவர்கள் பாதிக்கப்பட்டதை போல, காஷ்மீர் இந்துக்களும், சீக்கியர்களும் மதவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
எனவே, ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிருஸ்தவர்கள் மேல் காட்டப்படும் அதே அக்கறையை இவர்கள் மீதும் செலுத்த வேண்டும். எனவே, பிரதமர் ஒரு கண்ணில் வெண்ணையையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது எந்த விதத்தில் நியாயம்.
காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் மீதும் கரிசனம் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இந்துக்களும், மதவாதத்திற்கு இரையானவர்களே என்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய துணிவு பிரதமருக்கு வேண்டும். ஒரிஸ்ஸாவில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு செய்யப்படும் அனைத்து மறுவாழ்வு பணிகளும், காஷ்மீர் இந்துக்களுக்கும் செய்ய வேண்டும். இதுதான் உண்மையான மதச்சார்பின்மை ஆகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.