ஆண்டிப்பட்டி செல்கிறார் ஜெயலலிதா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, செப்டம்பர் 15ம் தேதி தனது சொந்தத் தொகுதியான ஆண்டிப்பட்டிக்குச் செல்கிறார். அங்கு அண்ணா நூற்றாண்டையொட்டி சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 13.02.2008 அன்று நடந்த அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 15ந் தேதி முதல் நூறாவது ஆண்டு முழுவதும் பொதுக் கூட்டங்கள், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், மாணவ, மாணவியருக்கான கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும், அதிமுக கொடியை ஏற்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அதனடிப்படையில் 15 முதல் 17 வரை தமிழகத்திலும், பிற மாநிலங் களிலும் பொதுக் கூட்டங்கள் நடை பெற உள்ளன. அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இருந்துள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, யோகா பயிற்சி, வாகன ஓட்டுனர் பயிற்சி போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் முதல்கட்டமாக அண்ணா பிறந்த நாளான 15ந் தேதி துவங்கப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இந்த சிறப்பு திட்டங்களை நான் துவக்கி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
14ந் தேதி தேனியில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். 15ந் தேதி ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும் எம்ஜிஆர் சிலைக்கும் அவர் மாலை அணிவிக்கிறார்.
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.