கல்பாக்கம் அணு உலை-மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
சென்னை: கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட்டில் நாளை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை இயற்கை யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்குகின்றன. இந்த இரு யூனிட்டுகளும் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
தொடக்கத்தில் தலா 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி திறன் 235 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.28 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இயற்கை யுரேனியம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான அணு மின் நிலையங்களில் 220 மெகாவாட்டிற்கும் குறைவாக உற்பத்தி செய்யும்படி இந்திய அணுமின் கழகம் உத்தரவிட்டது.
இதையடுத்து கல்பாக்கத்தில் சமீபகாலமாக சராசரியாக தலா115 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது மின் உற்பத்தி நிறுத்தப்படும். கடந்த ஜூலை மாதம் இரண்டு யூனிட்டுகளிலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன் முதல் யூனிட்டில் பராமரிப்பு பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதில் தினமும் 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இரண்டாவது யூனிட்டிலும் பராமரிப்பு பணி முடிவடைந்துள்ளது. இந்த யூனிட்டில் நாளை மின் உற்பத்தி தொடங்கப்படுகிறது. இதிலும் நாள் ஒன்றுக்கு 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும். எனவே மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.