திருவண்ணாமலை: குன்றுகளை பசுமையாக்க ரூ.5 கோடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க ரூ.5 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6,000 மரக்கன்று நடும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகள், குன்றுகளில் பசுமை வளையம் என்ற திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
அதில் தேனிமலை குன்றில் தனியார் நிறுவனமும், அருணை பொறியியல் கல்லூரி மாணவர்களைக் கொண்டு மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கட்டட மையம், வேளாண்மைத் துறை, வனத்துறை ஆகியவைகள் இணைந்து செயல்படுத்தி உள்ளன.
இந்த குன்றில் 14 வகையான மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. நாவல், புங்கன், துரிஞ்சை, வெப்பாளை, இலுப்பை, நெல்லி, தாண்டிரி, வேம்பு, நீர்மத்தி, சிசு, ஆலம், அரசன், அவுஞ்சி, பாதாம், வெளாண் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மூன்று கட்டங்களாக நிதியை பெற்று மலைகளில் மரங்களை வளர்க்க உள்ளோம். விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள மலைகளை பசுமையாக்க ரூ.5 கோடி நிதி கோரி மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார் என்றார்.