கோவை விநாயகர் ஊர்வலத்தில் ஆசிட்வீச்சு-மேட்டுப்பாளையத்தில் கல்வீச்சு
கோவை அருகே வீரகேரளத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று மாலை அவற்றின் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் சென்ற வழியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆசிட் வீசப்பட்டதில் 5 பேரின் உடல் கருகியது.
பலத்த காயமடைந்த அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு விநாயகர் ஊர்வலம் தொடர்ந்தது.
மேட்டுப்பாளையத்தில் பஸ் உடைப்பு:
அதேபோல மேட்டுப்பாளையத்தில் பாஜக, இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 36 விநாயகர் சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அதைக் கரைத்து விட்டு இரவில் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தவர்கள், சிறுமுகை ரோடு அருகே வந்தபோது இன்னொரு பிரிவினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் சரமாரியாக கல்வீச்சில் இறங்கினர். அப்போது அந்த வழியே வந்த பஸ்கள், லாரிகள், கார்களின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் 3 அரசு பஸ்கள், 4 கார்கள், 2 லாரிகளின் சேதமடைந்தன.
இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து நிலைமை சீராக்கினர். கல்வீச்சு தொடர்பாக மணிகண்டன், மாரியப்பன், பாலமுருகன் ஆகியோர் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
சென்னையில் 500 விநாயகர் சிலைகள் கரைப்பு:
இந் நிலையில் சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக, இந்து முன்னணி, சிவ சேனா, விஎச்பி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகளின் சார்பில் திருவட்டிஸ்வரன்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா நகர், புளியந்தோப்பு, வண்ணாரப் பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட பல இடங்களில் 744 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
இந்த சிலைகளை இன்றும், நாளையும் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, ராயபுரம் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மிண்ட் பகுதியில் இருந்து அணிவகுத்து காசிமேடு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.
தென்சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் பட்டினபாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
நாளை சிலைகள் கடலில் கரைக்கப்படவுள்ளன.
கடலில் மூழ்கி ஒருவர் பலி:
இந் நிலையில் கடலூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க கடலுக்கு சென்றவர் கடலில் மூழ்கி இறந்தார்.
பண்ருட்டியை அடுத்த கண்டரக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (22), கோவிந்தராஜ் (22) ஆகியோர் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் சென்றனர்.
அந்த சிலைகள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஒன்வென்றாக கரைக்கப்பட்டன. அப்போது கடலில் ராட்சத அலை ஏற்பட்டு கார்த்திக்கை இழுத்துச் சென்றது. அதில் அவர் கடலில் மூழ்கி பலினாயானர்.
உடனிருந்த கோவிந்தராஜ் அலையில் சிக்கி உயிர் தப்பினார். அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.