என்.எஸ்.ஜி. ஒப்புதல்: பிரதமருக்கு பாஜக, இடதுசாரிகள் கண்டனம்
டெல்லி: என்.எஸ்.ஜி சலுகை மூலம், இனிமேல் எப்போதுமே அணு குண்டு சோதனை நடத்த முடியாத அளவுக்கு இந்தியா தனது உரிமையை இழந்து விட்டது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதேபோல இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து விட்டார் பிரதமர் என்று இடதுசாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
என்.எஸ்.ஜி. சலுகை ஒப்புதல் குறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக துணைத் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவிக்கையில், என்.எஸ்.ஜி. ஒப்புதல் குறித்த விரிவான விவரங்களைப் பார்த்த பின்னர் பாஜக தனது முழுமையான கருத்ைத வெளியிடும்.
இருப்பினும், புஷ் நிர்வாகம், அந்நாட்டு நாடாளுமன்ற வெளி விவகராகக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதம் மூலம், அணு குண்டு சோதனை நடத்தும் உரிமையை இந்தியா முழுமையாக இழந்து விட்டதை தெளிவாக்கி விட்டது.
இந்தியா மிகப் பெரிய மார்க்கெட், அதன் பலன்களை நாம் அனுபவிக்கலாம் என்ற காரணத்தால்தான் இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில் ரஷ்யா, பிரான்ஸும் கூட தங்களது சுய லாபத்தையே அதிகம் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளன.
அணு தீண்டாமை விலகி விட்டது என்று பேசுகிறார்கள். என்ன தீண்டாமை வந்து விட்டது நமக்கு. பல்வேறு தடைகள் நம் மீது திணிக்கப்பட்ட போதும் கூட வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது. பல்வேறு அதி நவீன அணு தொழில்நுட்பங்கள் அதன் பிறகுதான் கிடைத்தது. எனவே இந்தியா அணு தீண்டாமைக்கு உட்பட்டு விட்டது என்று பேசுவது முட்டாள்தனமானது என்றார் அவர்.
தொடர்ந்து எதிர்ப்போம்: சிபிஐ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்ைத தொடர்ந்து எதிர்ப்போம்.
என்.எஸ்.ஜி. ஒப்புதல் குறித்த முழு விவரமும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் நமது நாடு தனது இறையாண்மையை இழந்து விட்டது என்று மட்டும் தெரிகிறது என்றார்.
இந்தியா சரணடைந்து ட்டது: எச்சூரி
சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பது போல தெரிகிறது. மேலும் அணு ஆயுத சோதனையை நடத்த மாட்டோம் எனவும் இந்தியா உறுதியளித்துள்ளது. இது அமெரிக்காவிடம் முழுமையாக சரணடைந்து விட்டதாகத்தான் அர்த்தம் என்றார் எச்சூரி.
பிரதீபாவை சந்திக்க இடதுசாரிகள்- மாயாவதி முடிவு
இதற்கிடையே, புஷ் நிர்வாகம், அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டிக்கு எழுதிய கடித விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து முறையிட இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
செவ்வாய்க்கிழமை இக்கட்சிகளின் தலைவர்கள் பிரதீபா பாட்டீலை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்கவுள்ளதாக சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி தெரிவித்தார்.
நேற்று நடந்த சிபிஎம் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.