அணு ஆயுத சோதனை நடத்த தடையில்லை: ககோத்கர்
டெல்லி: என்.எஸ்.ஜி.யிடம் சலுகை பெறுவதற்காக அணு ஆயுத சோதனை நடத்த மாட்டோம் என எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் இந்த சட்டப்பூர்வமான உரிமை எந்த வகையிலும் பறி போகவில்லை என்று இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் கூறியுள்ளார்.
என்.எஸ்.ஜி. ஒப்புதல் செய்தி வெளியானவுடன் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு ஆயுத சோதனை நடத்தும் இந்தியாவின் சட்டப்பூர்வமான உரிமை பாதுகாப்பாகவே உள்ளது. அதில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை.
என்.எஸ்.ஜியிடம் ஒப்புதலைப் பெறுவதற்காக இதுதொடர்பான எந்த சட்டப்பூர்வமான உறுதிமொழியையும் இந்தியா அளிக்கவில்லை. மேலும், என்.எஸ்.ஜி. ஒப்புதலில் அணு ஆயுத சோதனை குறித்து பாதகமாக எந்தக் குறிப்பும் இல்லை.
நாமாகவே, அணு ஆயுத சோதனையை நடத்துவதில்லை என்ற கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு அதை கடைப்பிடித்து வருகிறோம். அதை நாம் தொடர்ந்தும் வருகிறோம்.
என்.எஸ்.ஜி. அனுமதி அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது. அப்போது அதில் என்ன இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
இந்தியாவுக்கு இந்த சலுகையாலும், அனுமதியாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நம்முடைய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இந்த ஒப்பந்தம் அவசியம். அதற்கு என்.எஸ்.ஜி.யின் சலுகைகள் மிக மிக அவசியம் என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றார் ககோத்கர்.