ரூ.1 கோடி ஹெராயினுடன் வட மாநிலத்தவர் கைது
கன்னியாகுமரி: ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி புது பஸ் நிலையத்தில் ஹெராயினுடன் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் நிற்பதாகவும், அவரிடம் இருந்து ஹெராயின் பெறுவதற்காக ஒரு கும்பல் வருவதாகவும் கன்னியாகுமரி டிஎஸ்பி ஸ்டாலின் மைக்கேலுககு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீஸார் பஸ் நிலையத்தில் ரகசியமாக முகாமிட்டனர். அப்போது கையில் பையுடன் ஒருவர் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்தார். போலீஸார் அவரை பிடித்து சோதனையிட்டனர்.
அந்த பையில் ஒரு கிலோ அளவிலான ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலம் கட்டாக் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கைப்பற்ற ஹெராயினின் மதிப்பு ரூ.1 கோடி என்று போலீசார் தெரிவித்தனர். சந்தோஷிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் ஹெராயினை பெற வருவதாக இருந்து கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.