பிந்த்ரா, மாதவன் நாயருக்கு கெளரவ டாக்டர் பட்டம்
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தவர் பிந்த்ரா. அவருக்கும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயருக்கும் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
இன்று காலை நடந்த பல்கலைக்கழகத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில், இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆளுநர் பர்னாலா டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
இதுதவிர பிந்த்ராவுக்கு பல்கலைக்கழகம் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசும் அளிக்கப்பட்டது.
பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்படும் விளையாட்டு அகாடமிக்கு பிந்த்ரா அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக, விழாவில் பங்கேற்பதற்காக பிந்த்ரா நேற்று சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் மூத்த துணை தலைவர் சீத்தாராமராவ் மாலை அணிவித்து வரவேற்றார். எஸ்ஆர்எம் பல்கலை துணைவேந்தர் சத்யநாராயணா, பதிவாளர் சேதுராமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் மேரிராஜாத்தி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பல்கலை மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு அபிவிநவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கொரமண்டல் ஹோட்டலில் தங்குவதற்காக சென்றார் பிந்த்ரா. அங்கு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் பெண் ஊழியர்கள் அவிநவ்வுக்கு மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு வந்த வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.