அரசு-மம்தா சமரசம்: டாடா ஏற்க மறுப்பு?
இது குறித்து டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னவென்றே சரியாகத் தெரியவில்லை. மேலும் அது குறி்த்து எங்களுடன் பேசவும் இல்லை. இதனால் நானோ தொழிற்சாலை அமைப்புப் பணிகளை தொடர்ந்து நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
முக்கிய தொழிற்சாலையும் துணைத் தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் அமையும் வகையில் முடிவெடுக்கப்பட்டால் தான் நானோ கார்களை அங்கு தயாரிக்க முடியும். மேலும் அங்கு தொடர்ந்து அமைதியான சூழலை நிலவச் செய்ய அனைத்துத் தரப்பினரும் உறுதி மொழி தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திட்டத்துக்காக நிலத்தை இழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தருவதாக மேற்கு வங்க அரசு உறுதியளித்தது. இதையடுத்து மம்தா பானர்ஜி தரப்புக்கும் முதல்வர் புத்ததேவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தி தலைமையில் நடந்த இந்தப் பேச்சில் டாடா நிறுவனம் பங்கேற்கவில்லை.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் டாடாவுக்கு தரப்பட்ட 44 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெறுவது என முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. இதை டாடா ஏற்க மறுத்துள்ளது. தங்களுக்கு தரப்பட்ட 997 ஏக்கர் நிலமும் தொழிற்சாலைக்கு அவசியமானது. நிலத்தை விட்டுத் தந்துவிட்டு அங்கு தொழிற்சாலை அமைவது சாத்தியமில்லை என டாடா கூறுகிறது.
இதனால் தான் பேச்சுவார்த்தையில் மம்தா-அரசு தரப்புக்கு இடையே ஏற்பட்ட முடிவை டாடா ஏற்க மறுப்பதாகத் தெரிகிறது.