சேது கால்வாய்: 1 மீட்டர் மட்டுமே தோண்டப்பட வேண்டும்-பாலு
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேது சமுத்திர திட்ட பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 11 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு மீட்டர் ஆழம் தான் தோண்ட வேண்டும்.
தமிழகத்தில் நடந்து வரும் தங்க நாற்கரசாலைப் பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண்.7-ல் உள்ள பணகுடி முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை தவிர மற்ற அனைத்து 4 வழிச்சாலைகளும் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும்.
இந்தியா முழுவதும் தங்க நாற்கர சாலை பணியை பொறுத்தவரை 5,846 கிலோ மீட்டரில் 181 கிலோ மீட்டர் தவிர மற்ற பணிகள் அனைத்தும் 97 விழுக்காடு வரை முடிந்து விட்டன.
ரயில்வேத் துறை பாலத்திற்கான வடிவமைப்பைப் போட்டு தருவதில் காலதாமதம் ஏற்படுவதால் ஒரு சில இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனால் வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில்வே பாலங்கள் அமைப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
இந்தியா முழுவதும் 5,000 கிலோ மீட்டர் நீள சாலைகள் இரு வழிச் சாலைகளாக மாற்றப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,250 கி.மீ. நீள சாலை இரு வழிச் சாலையாக மாற்றப்படுகிறது என்றார்.
நிறைய ரிங் ரோடுகள் வருகின்றன:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பைபாஸ் சாலையை திறந்து வைத்து டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏராளமான ரிங் ரோடுகள், பைபாஸ் சாலைகள், கிரேட் செப்பரேட்டார்கள் மற்றும் பாலங்கள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமையவுள்ள புதிய ரிங் ரோடுகள் மற்றும் சென்னை துறைமுகத்திற்கான விரிவுபடுத்தப்பட்ட இணைப்பு சாலை ஆகியவை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் உள்ள சாலை கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின் அளவு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்து 690 கோடியாகும். இது வரலாறு காணாத முதலீடாகும்.
தேதிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் 6 மற்றும் 7வது கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் சாலைகள் மற்றும் ரிங் ரோடு பணிகள் 2015ம் ஆண்டு முடிவடையும் என்றார் அவர்.