சென்னை: ரூ.4,150 கோடியில் அசோக் லேலண்டு-நிசான் தொழிற்சாலை
சென்னை: தமிழகத்தில் அசோக் லேலண்டு மற்றும் நிசான் ஆகியவை இணைந்து ரூ.4,150 கோடியில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்கவுள்ளன.
இத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
வாகன தயாரிப்பில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமான அசோக் லேலண்டு சென்னைக்கு அருகில் எண்ணூரில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. மேலும் ஓசூர் மற்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 5 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
இந் நிறுவனம் ஜப்பானின் நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு 1 லட்சத்து 90,000 வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. 3 கூட்டு திட்டங்கள் மூலம் இந்தத் தயாரிப்புப் பணியில் இரு நிறுவனங்களும் இறங்கவுள்ளன.
இது தவிர ஆண்டுக்கு 1 லட்சம் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் தயாரிக்கும் ஒரு திட்டத்தையும் அசோக் லேலண்டு செயல்படுத்தவுள்ளது.
எண்ணூர்-ஓசூர்-பிள்ளைப்பாக்கம்:
இந்த வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணூர், ஓசூர், பிள்ளைப்பாக்கம் போன்ற இடங்களில் ரூ.4,150 கோடி முதலீட்டில் அமையவுள்ளன.
இதன் மூலம் 4,500 பேருக்கு நேரடியாகவும், ஏறத்தாழ 13,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இத்தொழிற்சாலை மூலம் கிடைக்கும் முதலீடு அசோக் லேலண்டு மற்றும் நிசான் நிறுவனங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய முதலீடாகும்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை முதன்மைச் செயலாளர் எம்.எஃப். பாரூகி, அசோக் லேலண்டு நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சேஷசாயி, நிசான் நிறுவனம் சார்பாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆன்ட்ரூ பால்மர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனமும் இந்தியாவின் ஹீரோ நிறுவனமும் இணைந்து சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில் வணிக வாகனங்கள் திட்டத்தை அமைத்து வருகின்றன.
இப்போது அசோக் லேலண்ட் மற்றும் நிசான் ஆகியவை இன்னொரு வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கின்றன.
இவை அனைத்தும் சென்னைக்கு மேலும் மேலும் சிறப்புகளைச் சேர்க்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.