விஜயன் கொலை: மனைவியின் தங்கை-போலீஸ்காரர் கைது
மேலும் இவர் கொடுத்த வாக்குமூலத்தில் விஜயனை அடித்து கொன்ற கூலிப்படைக்கு சென்னை போலீஸ்காரான கருணாகரன் என்பவர் தான் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பானுமதி, கருணாகரன் ஆகிய இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின்படி பானுமதியின் தம்பி ராஜா, உறவினர் பத்மினி, கூலிப் படையை சேர்ந்த சுரேஷ், சாலமன் ஆகிய நால்வரும் பிடிபட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதியன்று இரவு கோட்டூர்புரத்தில் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக அவரது மனைவி சுதா அபிராமபுரம் போலீஸில் புகார் செய்தார். அதில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக தனது குடும்பத்தினரே இந்தக் கொலையைச் செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை முதலில் அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விஜயனின் உறவினர்களின் தொலைபேசி பேச்சுக்களை கண்காணித்து வந்தனர். அதன் பலனாகத்தான் பானுமதி-போலீஸ்காரர் கருணாகரன் ஆகியோர் பிடிபட்டுள்ளனர்.
கருணாகரன் தென் சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். பானுமதி கொடுத்த தகவலின் பேரில் தான் கருணாகரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர் பானுமதியின் தூரத்து உறவினர் ஆவார். எம்.ஜி. ஆரின் சொத்துக்களை நிர்வகிப்பதில் விஜயன் முட்டுக் கட்டையாக இருப்பதாகவும், விஜயன் ஒழிந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என்றும் கருணாகரனிடம் பானுமதி கூறியுள்ளார்.
இதையடுத்து கருணாகரன் தான் விஜயனை தீர்த்துக் கட்டும் திட்டத்தை தயார் செய்துள்ளார்.
இதற்கு கூலிப்படைக்கு 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கருணாகரன் கேட்டுள்ளார். அதற்கு பானுமதி சம்மதித்தார்.
வட சென்னையை சேர்ந்த ரெளடிகள் சுரேஷ், சாலமன், ராஜா மற்றும் இன்னொருவனை ஒருங்கிணைத்த போலீஸ்காரர் கருணாகரன், இந்தக் கொலையை செய்ய வைத்துள்ளார்.
சம்பவத்தன்று ஒரு காரில் கூலிப் படையை கருணாகரன் அழைத்து சென்றார். காரை கருணாகரனே ஓட்டிச் சென்றுள்ளார். பீமன்னா கார்டனில் இருந்து வந்து கொண்டிருந்த விஜயன் கார் மீது தன் காரை கருணாகரன் வேண்டுமென்றே மோத விட்டார். இதையடுத்து விஜயன் காரில் இருந்து கீழே இறங்கி வர, அவரை கூலிப்படை இரும்பு கம்பிகளால் அடித்துச் கொன்றுள்ளது.
ஆனால், கூலிப் படைக்கு பேசிய ரூ. 5 லட்சத்தில் ரூ. 3 லட்சத்தை மட்டுமே பானுமதி தந்துள்ளார். இதையடுத்து மீதிப் பணம் கேட்டு பானுமதியை கருணாகரன் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக இருவரும் தொலைபேசியில் பேசியதை போலீசார் ரகசியமாக பதிவு செய்ததன் அடிப்படையில் தான் கொலையில் இவர்களுக்கு உள்ள தொடர்பு வெளியில் வந்துள்ளது.
இத்தனைக்கு பானு வசித்து வருவது பெங்களூரில் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்தபடியே கருணாகரன் மூலம் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார்.
இப்போது சென்னை கொண்டு வரப்பட்டுள்ள பானு ஆலந்தூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
போலீஸ்காரர் கருணாகரன் கொடுத்த தகவலின் பேரில் பானுமதியின் தம்பி ராஜா, உறவினர் பத்மினி, கூலிப் படையை சேர்ந்த சுரேஷ், சாலமன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் மிக மிக முக்கிய புள்ளி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.