சாலை மறியல்-அதிமுக எம்எல்ஏ சாமி கைது
மதுரை: குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ சாமி மற்றும் பொது மக்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது ஆமூர், முருகன்பட்டி, மலம்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை, பஸ் வசதி, சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த பல வருடங்களாகவே மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி மறியில் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக எம்எல்ஏ சாமி அறிவித்திந்தார். இதையடுத்து எம்எல்ஏ சாமியுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏ சாமி தலைமையில் மேலூர், ஆமூர், முருகன்பட்டி, மலம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேலூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறி்யலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். இதற்கு அதிமுக எம்எல்ஏ சாமியும், பொதுமக்களும் மறுத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.