வீடு வீடாக குறை கேட்ட மணிசங்கர் அய்யர்
சீர்காழி: மத்திய பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சீர்காழியை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் பனமங்கலத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி, திருக்கோலக்காவில் ஈமகிரி மண்டபம், புழுகாபேட்டையில் கட்டப்பட்டுள்ள பாலம், தேர் வடக்கு வீதியில் குடி நீர் தேக்கத் தொட்டி, ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டரிந்தார். மக்கள் கொடுத்த மனுக்களை வாங்கி படித்து அந்த மனு மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் அமைச்சர் செல்லும் வீடுகளுக்கு எல்லாம் அவரை வரவேற்று, தட்சனையை எதிர்பார்க்காமல் அவருக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். அமைச்சருடன் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமாரும் சென்றார்.