டாடா: 300 ஏக்கர் கேட்கும் திரிணமூல்-கெஞ்சும் அரசு!
கொல்கத்தா: நானோ தொழிற்சாலைக்காக டாடா நிறுவனம் சிங்கூரில் கையகப்படுத்தியுள்ள நிலத்தில், திட்டப் பகுதியிலிருந்து 300 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. அதேசமயம், சிங்கூரில் பணிகளை தொடருங்கள், பிரச்சினை வராது என டாடா நிறுவனத்திடம் மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக மேற்கு வங்க அரசு பல நூறு ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுத்தது. இந்த நிலத்தில் ஒரு பகுதியை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க சமீபத்தில் ஆளுநர் முன்னிலையில் அரசுக்கும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் சிங்கூர் நில விவகாரம் தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து ஆராய நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரபீந்திரநாத் பட்டச்சார்யா, பேச்சாராம் மன்னா, மேற்கு வங்க மாநில தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநர் சுப்ரதா குப்தா, ஹூக்ளி மாவட்ட நீதிபதி நீலம் மீனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நேற்று கொல்கத்தாவில் கூடி எப்படி செயல்படுவது என்று ஆலோசித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்டச்சார்யா, சிங்கூர் டாடா நானோ தொழிற்சாலை திட்டப் பகுதியிலிருந்து 300 ஏக்கர் நிலத்ைத திரும்பத் தர வேண்டும் என நாங்கள் கோரியுள்ளோம்.
நான்கு பேர் கொண்ட குழு, திட்ட பகுதியை நாளை பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளோம். அதன் பின்னர் மீண்டும் கூடிப் பேசுவோம் என்றார்.
டாடாவுக்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை:
இந்த நிலையில் நிலப் பிரச்சினை குறித்து கவலைப்பட வேண்டாம். பணிகளை தொடருங்கள் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சிங்கூரில் நானோ கார்களை தயாரிப்பதற்காக 997.11 ஏக்கர் நிலமும், கார் உதிரிபாகங்களை தயாரிக்கும் துணை நிறுவனங்களுக்காக 400 ஏக்கர் நிலமும் மேற்கு வங்க அரசால் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
துணை நிறுவனங்களுக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தைத்தான் மமதா பானர்ஜி திரும்பக் கேட்டு வருகிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிைலயில் நடந்த பேச்சுவார்த்தையில், திட்டப் பகுதியிலிருந்து அதிகபட்ச நிலத்தை திரும்பத் தர முடிவானது.
இந்த அதிகபட்ச நிலம் என்பதை தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி 300 ஏக்கர் நிலம் என்று கூறத் தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு டாடா நிறுவனம் உடன்படவில்லை.
ஆளுநர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தெளிவாக இல்லை. எனவே தெளிவான நிலை தெரியும் வரை பணிகளை தொடர மாட்டோம் என அது அறிவித்துள்ளது. இதனால் நானோ தொழிற்சாலைப் பணிகள் தொடராமல் தொடர்ந்து முடங்கியுள்ளன.
மேலும் மேற்கு வங்கத்ைத விட்டு வெளியேறவும் அது தயாராகி வருகிறது. இதையடுத்து டாடா நிறுவனத்திற்கு கெஞ்சலுடன் கூடிய கோரிக்கையை மேற்கு வங்க அரசு வைத்துள்ளது.
கார் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திலோ, துணை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திலோ, இனி எந்த பிரச்னையும் வராது என்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உறுதியளித்துள்ள மேற்கு வங்க அரசு, அங்கு உற்பத்தியையும், இதர பணிகளையும் துவக்கும் படி கோரிக்கை வைத்துள்ளது.
இது தொடர்பாக, மேற்கு வங்க மாநில வர்த்தம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிருபம் சென் கூறுகையில், நானோ தொழிற்சாலைக்கும், துணை நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள நிலத்தில், ஒரு பகுதியைக் கூட நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.
சிங்கூரில் இருந்து நானோ கார்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க அரசு விரும்புகிறது.
ராஜ்பவனில் நடந்த பேச்சு வார்த்தையில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட எந்த கோரிக்கையையும் மேற்கு வங்க அரசு ஏற்கவில்லை. இந்த பிரச்னை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும், அவர்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கும் இடையிலானது. அவர்கள் தீர்த்துக் கொள்வர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம் கொடுத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த பகுதியில் எந்த அளவுக்கு நிலம் வழங்க முடியும், எந்த இடத்தில் வழங்க முடியும் என்பதை ஆராய்வதாக நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம். மேற்கு வங்க தொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கணிசமான நிலம் இருக்கிறது.
இடையூறுகள் காரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறினால் ஏற்படக்கூடிய அசாதாரண நிலையை எதிர்க்கட்சிகளும் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
சிங்கூரில் நானோ தொழிற்சாலையை அமைதியான முறையிலும், சுமுகமாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் துவக்குவதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். வேறு இடத்துக்கு நானோ தொழிற்சாலை மாறினால், அது மேற்கு வங்க மாநிலத்துக்கு துரதிருஷ்டமாகிவிடும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சுமுகமான சூழ்நிலை ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறோம். நானோ கார்கள் மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்கும். மீண்டும் பணிகளை துவக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கு வங்க அரசு மேற்கொள்ளும் என்றார் அவர்.