சன் டிவி மீது தினமலர் அவதூறு புகார்
சென்னை: வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வெளியானது தொடர்பாக பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக சன் டிவி மீது தினமலர் நாளிதழ் புகார் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சன் டிவியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வத்தை போலீஸார் விசாரிக்கவுள்ளனர்.
தினமலர் நாளிதழின் (சென்னை எழும்பூர் அலுவலகம்) செய்தி ஆசிரியர் பார்த்திபன் சென்னை காவல்துறை ஆணையர் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வேலூர் தினமலர் பதிப்பில் நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம் ஒன்று வெளியானது தொடர்பாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் இந்த பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில், சன் டிவி செய்தி வெளியிட்டது. இது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல் ஆகும். இதுதொடர்பாக சன் டிவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
இந்தப் புகார் மனு மீது அரசு வக்கீலின் ஆலோசனை பெற்று சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், 153ஏ, 505-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதலில் செய்தி ஆசிரியர் பார்த்திபனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாதான் செய்திகளுக்கு முழுப் பொறுப்பு என்று பார்த்திபன் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜாவுக்கு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பினர். ஆனால் ராஜா வரவில்லை.
இந்த நிலையில் சன் டிவி சார்பில் நேற்றுமத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒரு கடிதம் தரப்பட்டது. அதில், செய்திகளுக்கு ராஜா பொறுப்பில்லை. நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம்தான் பொறுப்பு என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முரசொலி செல்வத்திடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.
முரசொலி செல்வம், மறைந்த முரசொலி மாறனின் தம்பி ஆவார். இவர் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.