ஆர்.எம்.வீ. 83வது பிறந்தநாள்-கருணாநிதி வாழ்த்து
சென்னை: எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் 83வது பிறந்தநாளையொட்டி முதல்வர் கருணாநிதி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரான வீரப்பன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவரை, கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் முதல்வர் கருணாநிதி சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன் ஆகியோரும் சென்றனர். ஆர்.எம்.வீயின் வலதுகரமான ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவனர் ஜெகத்ரட்சகனும் உடன் இருந்தார்.
முன்னதாக வீரப்பனுக்கு கருணாநிதி அனுப்பிய வாழ்த்து செய்தியில்,
'அருளாளர் ஆர்.எம்.வீ'' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அருமை சகோதரர் ஆர்.எம்.வீரப்பன் 83-வது ஆண்டு பிறந்த நாள் விழா காண்பதும், அந்நாள் இலக்கிய விழாவாக கொண்டாடப்படுவதும் அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பின் மூலம் படிப்படியாக, உயர்ந்து என் இனிய நண்பர் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்று, அவரது அமைச்சரவையில் அமைச்சராக திகழ்ந்து,
எம்.ஜி.ஆர். கழகம் என ஓர் இயக்கத்தை நிறுவி, திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கி பன்முக ஆற்றலுடன் புகழ் வளர்ந்துள்ள சகோதரர் ஆர்.எம்.வீ பல்லாண்டு வாழ என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.
இலக்கிய விழா ஆர்.எம்.வீ. புகழ்பாடி எழுச்சியுடன் நிகழ்வதாகுக என்று கூறப்பட்டிருந்தது.
அதே போல மத்திய அமைச்சர் ரகுபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயர் மா.சுப்பிரமணியன், தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட பலரும் வீரப்பனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் குறித்து ஆர்.எம்.வீரப்பன் கூறுகையில்,
என்னை போன்றவர்கள் மற்ற நல்ல தலைவர்களை பின்பற்றி கொள்கைகளில் மாறுபாடு ஏற்பட்டாலும், லட்சியத்தில் மாறுபடாமல் அந்த தலைவர்களை பின்பற்றி வந்திருக்கிறோம்.
எம்.ஜி.ஆரிடம் 34 வருடங்கள் இருந்தேன். முதல்வர் கருணாநிதியிடம் பழக்கம் ஏற்பட்ட பிறகு அவருடன் நல்லுறவு வைத்துள்ளேன். அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து வழிகாட்டும் தெய்வம். எம்.ஜி.ஆர் கழகத்தில் இருந்தாலும் தி.மு.க. மீது எனக்கு பற்று உண்டு. எப்போதும் நான் அதற்கு தொண்டேன்.
தமிழ்நாட்டையும் தமிழையும் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்பதை என்னுடைய பிறந்த நாள் செய்தியாக சொல்கிறேன் என்றார்.
அபிராமி ராமநாதனுக்கும் வாழ்த்து:
அதே போல சென்னை நகர திரையரங்கு அதிபர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்-நல்லம்மை ஆகியோரின் மணிவிழா, சென்னையில் நேற்று நடந்தது. அவர்களையும் முதல்வர் கருணாநிதி நேரில் சென்று வாழ்த்தினார்.
ராமநாதன் தம்பதி முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
தம்பதியை மத்திய அமைச்சர் வாசனும் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.