சென்னை: 30 விதிமீறல் கட்டடங்கள் இடிப்பு?
சென்னை: சென்னை நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 30 கட்டடங்களை இடிக்க சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்கள் பலியாயினர். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்தன.
தீயை உடனடியாக அணைக்க முடியாததால்தான் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தண்ணீரை அடிப்பதற்கு சரவணா ஸ்டோர்ஸ் கட்டடத்தில் போதிய வசதிகள் செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் பல விதிமீறல்களும் கட்டடத்தில் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி கடை உரிமையாளர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சரவணா ஸ்டோர்ஸ் உள்பட விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு அனுமதி அலித்த மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து விழித்துக் கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் தற்போது விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை கணக்கெடுத்து அவற்றை இடிக்க முடிவு செய்துள்ளனர்.
முதல் கட்டமாக 2007-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதிக்கு பிறகு விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி - பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பல்வேறு கட்டடங்களை ஆய்வு செய்தனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 13 கட்டடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை உடனடியாக இடிக்க அதிகாரிகள் முடிவு செய் துள்ளனர்.
அதே போல் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 17 கட்டிடங்கள் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த கட்டடங்களும் உடனடியாக இடிக்கப்படுகின்றன.
கடந்த மே மாதம் சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 82 கட்டடங்களை இடிக்க மாநகராட்சி - சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து அந்த கட்டடத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில் 56 கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும், 26 கட்டிடங்களுக்கு மாநகராட்சியும் நோட்டீஸ் அனுப்பின. மாநகராட்சி அதிகாரிகள் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் வணிகப் பகுதி நிறைந்த பகுதிகளில் உள்ள கட்டடங்களை மீண்டும் ஆய்வு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
சென்னை மற்றும் புறநகரில் 4856 கட்டடங்கள் விதி முறைகளை மீறி கட்டப் பட்டுள்ளன. அவற்றில் 1842 கட்டடங்களை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அதை இடிக்கும் பணி நடைபெறவில்லை. விரைவில் அவையும் இடிக்கப்படும் எனத் தெரிகிறது.