என்.கே.கே.பி. ராஜா மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சிவபாலன் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பிடியில்தான் உள்ளார். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், ராஜாவுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா மீது ஆள் கடத்தல் புகார் கூறப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி அவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் ஆகியோரை ராஜாவின் ஆட்கள் கடத்திச் சென்று மிரட்டி நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டனர் என்றும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து பழனிச்சாமியும், மலர்விழியும் விடுதலை செய்யப்பட்டனர். சிவபாலனை விடுவிக்காததால் மனித உரிமை கமிஷனில் முறையீடு செய்தனர்.
அப்போது திடீர் என்று சிவபாலன் ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் முன் ஆஜர் ஆகி, என்னை யாரும் கடத்தவில்லை. அமைச்சர் ராஜா கஸ்டடியில் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்றார். அமைச்சரின் கஸ்டடியில் சுதந்திரமாக இருக்கிறேன் என்று அவர் கூறியதன் மூலம் சிவபாலன் ராஜாவின் பிடியில்இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அந்தப் பேட்டியுடன் சிவபாலனையும் காணவில்லை. அவர் எங்கே போனார் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.
இதையடுத்து சிவபாலனை கண்டுபிடித்து தருமாறு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது முதலில் சிவபாலனின் பெற்றோர் பழனிச்சாமி, மலர்விழி ஆகியோர் மட்டும் ஆஜர் ஆனார்கள்.
அதன் பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிவபாலன் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் வழக்கை பைசல் செய்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராஜா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் இளங்கோவன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் கடத்தப்பட்ட வழக்கில் அவர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதால் வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சிவபாலன் எந்த சூழ்நிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பதை உயர்நீதிமன்றம் முறையாக விசாரிக்காமல் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன் பிறகு சிவபாலன் தொடர்ந்து என்.கே.கே.பி. ராஜாவின் பிடியில்தான் இருக்கிறார். அவரால் சுதந்திரமாக நடமாடவில்லை சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டு உள்ளார்.
இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு சிவபாலனை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும். அவரை சுதந்திரமாக நடமாட விடுமாறு அரசுக்கும், என்.கே.கே.பி. ராஜாவுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை வருகிற 22-ந்தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.