வவுனியா: பலியான 10 புலிகள் உடலுக்கு பிரபாகரன் அஞ்சலி
வன்னியில் நடந்த நிகழ்ச்சியில் உடல்களுக்கு மாலை அணிவித்த புலிகளின் தலைவர் பிரபாகரன், விளக்கையும் ஏற்றி வைத்தார்.
கடந்த செவ்வாக்கிழமை புலிகளின் விமானங்களுடன் தற்கொலைப் படையைச் சேர்ந்த புலிகளும் வவுனியா ராணுவ தளத்தை தரைவழியே தாக்கினர்.
புலிகளின் வான்படையுடன் தரைப்படையும் சேர்ந்து தாக்குதல் நடத்தியிருப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள விமானப் படைத் தளத்தை இரு பிரிவுகளும் இணைந்து தாக்கின.
பிரபாகரன் வீடு இடிப்பு:
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் பூர்வீக இல்லத்தை ராணுவத்தினர் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
புலிகள் தாக்குதலில் வவுனியாவில் உள்ள இலங்கை ராணுவ தலைமையகத்திற்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம், வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் கிளிநொச்சிக்கு அருகே உள்ள விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைமையகம் தாக்கப்பட்ட தாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. ஆனால் இந்த செய்தியை விடுதலைப் புலிகள் மறுத்தனர்.
அந்தப் பகுதி மக்கள் தனக்கு இது பற்றி தகவல் தந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் உள்ள பிரபாகரன் வீட்டுக்கு சென்ற இலங்கை ராணுவத்தினர் சுவர்களை உடைத்து ஜன்னல் நிலைகளையும், கதவுகளையும் பெயர்த்து எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த வீட்டில் நீண்ட காலமாக யாரும் வசிக்கவில்லை. இருந்தாலும் அப்பகுதி மக்கள் அந்த வீட்டை பராமரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.