உயர்கல்வியில் தமிழகம் 3வது இடம்: பொன்முடி
சென்னை:திமுக தலைமையேற்ற பிறகு தமிழகம் உயர்கல்வியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆட்சி கனவில் இருக்கும் ராமதாஸ், உண்மயை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
உயர்கல்வித் துறையில் அகில இந்திய அளவில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,
உயர்கல்வித் துறையில் தமிழகம் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், இந்த நிலைக்கு காரணமானவர் யார் என்றும் கூற வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுள்ளார். சில புள்ளி விபரங்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்த புள்ளி விபரங்கள் முற்றிலும் தவறானவை. டாக்டர் அனந்த கிருஷ்ணனின் சமீபத்திய அறிக்கையில் தமிழகம் உயர்கல்வித் துறையில் 3வது இடத்தில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையை வைத்தும், அப்போதிருந்த கல்லூரிகள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட்டது.
அவசர அவசரமாக அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அப்போதைய துணை வேந்தரையாவது தீர விசாரித்திருக்கலாம். அரைகுறையாக தெரிந்து கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
திமுக அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகம் உயர் கல்வித்துறையில் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கல்வியியல் பல்கலைக்கழகமும் புதிதாக 7 அரசு கலைக்க ல்லூரிகளும், 6 பொறியியல் கல்லூரிகளும் இந்த அரசால் தொடங்கப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டு அரசு தரப்பு மாணவர் சேர்க்கை 32,088 ஆக இருந்தது. 2008ல் இது 78,270 ஆக உயர்ந்துள்ளது. 65 சதவிகித இடஒதுக்கீடும், நுழைவுத் தேர்வு ரத்து செய்ததும் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரித்துள்ளது.
பெண்களின் கல்வித்தரமும் உயர்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். 2011 ஆட்சிக் கனவில் இருக்கும் டாக்டர் ராமதாஸ் 2008ல் என்ன நடக்கிறது என்பதை யோசித்து பார்த்து பேசினால் நன்றாக இருக்கும் என்றார்.