இலங்கையில் காயமடைந்த 2 இந்திய பொறியாளர்கள்-விவரம் வெளியிட்டார் வைகோ
அவர்களது பெயர் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகும்.
கோவையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
மன்னிக்க முடியாத குற்றத்தை தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்து வருகிறது. ஒகேனக்கல், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளிலும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் பசி, பட்டினியில் வாடுகின்றனர். ஆனால், ராணுவ வீரர்கள், ராணுவ தொழில்நுட்ப பொறியாளர்களை மட்டும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இவர்கள், இலங்கை அரசின் கூலிப்படையாக செயல்படுகின்றனர்.
8ம் தேதி, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கையின் விமானப் படை ராடார் கருவி பலத்த சேதமுற்றுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ பொறியாளர்கள் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர், "இலங்கை ராணுவத்துக்கு உதவியாக இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொறியாளர்கள் 265 பேர், இலங்கையில் இருக்கின்றனர்' என கூறியுள்ளார். இது தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்த துரோகம்.
இதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே முழு காரணம். இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி, தேவைப்படும் நேரத்தில் போராடுவோம்.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவி பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக விளக்கி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் வைகோ.