மின்வெட்டை கண்டுபிடித்தவர் யார்?-விஜய்காந்த் Quiz!
ஈரோடு ஜெகன்நாதபுரம் காலனியில் நடந்த தேமுதிக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நான் முதன் முதலாக ஒரு படத்தை டைரக்ட் செய்ய உள்ளேன்.
விருத்தாசலம் தொகுதியில், விருத்தகிரீஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இதை மையமாக வைத்து விருத்தகிரி என்ற பெயரில் படத்தை இயக்கவுள்ளேன். காவல்துறை மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பது பற்றி இந்தப் படத்தில் எடுத்துச் சொல்லப்படும்.
மின் வெட்டினால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் நகர்புறங்களை விட மின்வெட்டு அதிகமாக உள்ளது.
மின்சாரத்தை கண்டு பிடித்தவர் எடிசன். மின்வெட்டை கண்டுபிடித்தவர் 'மின்வெட்டு' வீராசாமி. மின்வெட்டால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டால் விசைத்தறியாளர்கள் கண்ணீரில் உள்ளனர்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், சிறு- குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் பினாமி பெயரில் பெற்ற கடன்கள்தான் தள்ளுபடியாகியுள்ளது.
ஆனால், கடன் தள்ளுபடி பெற்ற சில விவசாயிகள் அடுத்து பயிர் கடன் பெற எந்த வங்கியை நாடினாலும் கடன் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
திமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்றும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அதிமுகவும்- திமுகவும், நல்லது செய்வார்கள் என்று மாறிமாறி மக்கள் ஓட்டுப் போட்டீர்கள். ஆனால் உங்களுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. வறுமை ஒழியாததால் விஜயகாந்த் நல்லது செய்வார் என்று என்னை தேடி இப்போது மக்கள் வருகிறார்கள்.
திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ரேசன் கடையில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு விற்கப்பட்ட போதே அந்த அரிசி தரம் இல்லை என்று பொதுமக்கள் சொன்னார்கள். ரேஷன் அரிசி கோழி தீவனத்துக்கு தான் பயன்படுவதாக புகார் வந்தது.
இந் நிலையில் இப்போது ஒரு கிலோ ரூ.1க்கு கொடுப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் பயன்படுவதை விட, இந்த திட்டத்தினால் ரேசன் அரிசி கடத்தல் மேலும் அதிகரிக்கும். இப்போது வழங்கப்படும்
ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை கால்வாசி விலையில் கொடுத்தால் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள். விநாயகர் சதுர்த்தி பற்றி பேசினால் பிஜேபியுடன் கூட்டணி என்கிறார்கள். பிறகு காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி என்று கதை கட்டுகிறார்கள்.
அடுத்து அதிமுகவுடன் கூட்டணி என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்களையெல்லாம் நம்பி நான் கட்சி தொடங்கவில்லை. தைரியம் இருந்தால் தனித்தனியாக தேர்தலை சந்தியுங்கள். நானும் தனியாக போட்டியிடுகிறேன்.
அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடிவதில்லை. அடிமட்டத்தில் இருந்தே சமச்சீர் கல்வி கொண்டு வர வேண்டும். இதை எல்கேஜியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சாதி- மத வேறுபாட்டை நான் அறவே வெறுக்கிறேன். ஆனால் சிலர் சாதி- மதத்தின் பெயரால் நாட்டை துண்டாடுகிறார்கள்.
தேமுதிக வளர்ந்து வருவதினால் திமுக பயப்படுகிறது. இதனால் இப்போது ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை தேர்தல் நேரத்தில் இலவசமாக வழங்க திமுக அரசு முன்வரலாம். இது போன்ற கவர்ச்சி திட்டம் தேவை இல்லை வளர்ச்சி திட்டம் தான் தேவை.
நரகாசுரன் இறந்த நாள் தான் தீபாவளி. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இல்லாத தினம்தான் மக்களுக்கு தீபாவளி.
காய்கறி, முட்டை, சேலை போன்றவற்றை பார்த்து பார்த்து வாங்கும் நீங்கள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று தரம் பார்த்து ஓட்டுப்போட வேண்டும்.
திமுக அரசு திட்டங்களை மட்டுமே போடுகிறது. அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவது இல்லை.
நான் நினைத்தால் மற்ற கட்சியுடன் கூட்டணி வைக்க முடியும். ஆனால், நான் யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. எந்த கட்சியுடனும் கூட்டணி தேவை இல்லை. எனக்கு தேவை மக்கள் தான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனியாகத் தான் போட்டியிடும்.
கறவை மாடுகள் இலவசமாக கொடுப்பதாக தேமுதிக தேர்தல் வாக்குறுதியில் கூறினேன். அதைத்தான் இன்று முதல்வர் மகளிர் குழுவினருக்கு கடனாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
''அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியும் கற்போம்'' என்பதே தேமுதிகவின் கொள்கை என்றார் விஜய்காந்த்.