123 ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் சட்டப்பூர்வமாகி விடும்: இந்தியா
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள அதிபர் ஜார்ஜ் புஷ் கூடவே இணைத்து அனுப்பிய கடிதம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியிலான உத்தரவாதங்கள், சட்டப்பூர்வமானதல்ல, அவை அமெரிக்காவைக் கட்டுப்படுத்தாது என்று புஷ் தெரிவித்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வதேச சட்டங்களின் படியும், ஒப்பந்த சட்டங்களின்படியும், 123 ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் சட்டப்பூர்வமானதாகி விடும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு உரிமைகள் உள்ளிட்டவை குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 123 ஒப்பந்தத்தின் கீழ்தான் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளாலும் 123 ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இது பகிரங்கமான ஒப்பந்தம்.
இரு அரசுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து விட்டால், உடனடியாக அது சட்டப்பூர்வமான ஒப்பந்தமாகி விடும். எனவே கவலைப்படத் தேவையில்லை என்றார் சர்னா.