காஸ் பற்றாக்குறை இல்லை - 2 லட்சம் இணைப்புகள் வழங்கப்படும்: அரசு
டெல்லி: நாட்டில் சமையல் காஸ் பற்றாக்குறை கிடையாது. விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2 லட்சம் பேருக்கும் விரைவில் காஸ் இணைப்புகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை செயலாளர் பாண்டே கூறுகையில், இணைப்பு வழங்குவதற்கு போதுமான எல்பிஜி காஸ்கள் இருப்பில் உள்ளன. விண்ணபித்துள்ள 2 லட்சம் பேருக்கும் இணைப்புகள் வழங்கும் பணியை இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செய்து வருகிறது.
சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக காஸ் இணைப்புகள் வழங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் பெட்ரோலிய நிறுவனங்களின் தலைவர்களை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதை சீர்செய்யும் வகையில் எரிபொருள் விநியோகம் செய்யும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கூடுதல் எரிபொருள் சப்ளைக்கு ஏற்பாடு செய்யும்படியும் அறிவுறுத்தினார்.
அப்போது, காஸ் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கும் விரைவில் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் என்றார்.
பெட்ரோலிய நிறுவனங்களின் சிஇஓக்கள், சமையல் காஸ் இணைப்புகளை நிதானமாக வழங்கினார்கள். நஷ்டங்களை சமாளிக்கும் வகையில் எரிபொருள் சப்ளையையும் கட்டுப்படுத்தினர் என்றும் பாண்டே விமர்சித்தார்.