தை 1 தமிழ் புத்தாண்டு சட்டம்: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசு அதுதொடர்பாக சட்டசபையில் புதிய சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்து பொது நலன் வழக்குகள் புகழ் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், பொதுநல நோக்கமில்லாமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ராமசாமி. அதில், பாரம்பரியமாக சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு சட்டத்தின் மூலம் இதை மாற்றுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ரஹிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து பதிலளிக்கும்படி தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.