அண்ணா நூற்றாண்டு-தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை!
சென்னை: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி கூறுகையில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், வாரிய அலுவலகங்கள், நிறுவனங்கள், பொது துறை அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 15ம் தேதியன்று மூடியிருக்கும்.
இதேபோல நிகழ்ச்சியின் முக்கியத்துவம் கருதி, தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் விடுமுறை விடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றத்திற்கும் விடுமுறை:
இதேபோல,சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை பெஞ்சுக்கும் அண்ணா பிறந்த நாளையொட்டி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி வெளியிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றம் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். கவுன்சிலிங் கிடையாது:
சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கடந்த 5ம் தேதி பி.எட். கவுன்சிலிங் தொடங்கிய நடந்து வருகிறது. இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று கவுன்சிலிங் நடைபெறாது என்று அரசு அறிவித்துள்ளது. இன்று நடக்க வேண்டிய கவுன்சிலிங், நாளை நடக்கும் கவுன்சிலிங்குடன் சேர்த்து நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.