அதிமுகவில் சேர சொன்னது ஜெயேந்திரர் தான்: எஸ்.வி.சேகர்
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு அக் கட்சியின் மைலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகருக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எம்பி, எம்ஏல்ஏக்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆனால், எஸ்.வி. சேகருக்கு இதுவரை அழைப்பிதழ் வரவில்லை.
கடந்த ஆண்டு நடந்த பொதுக் குழு, செயற்குழு கூட்டத்துக்கும் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாதது குறி்ப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் கூட்டம் நடந்த தினத்தன்று கோட்டைக்கு வர, அவர் ராஜினாமா செய்ய வந்துள்ளதாக தகவல் பரவியது.
இதையடுத்து தென் சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கோட்டைக்கு அனுப்பி அவரை கூட்டத்துக்கு வரவழைத்தார் ஜெயலலிதா.
அப்போது பேசிய சேகரும், நான் ராஜினாமா செய்ய போகவில்லை. எனது புதிய காருக்கு பேன்சி நம்பர் வாங்கப் போனேன் என்று பேசி சமாளித்தார்.
இந் நிலையில், இந்த முறையும் அவருக்கு அழைப்பிதழ் போகவில்லை. இதற்கு, சேகர் இல்லத்தில் நடந்த திருமணத்துக்கு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும், அவருடன் சேர்ந்து சேகர் போட்டோ எடுத்துக் கொண்டதும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் எஸ்.வி.சேகர் அதிமுகவில் இருந்து நீக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எனக்கு இதுவரை அழைப்பிதழ் வரவில்லை. நான் முதல்வர் கருணாநிதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஜெயலலிதா என்ன முடிவு எடுத்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். எனக்கு தேசம், நாடு, சாதி தான் முக்கியம். பிறகுதான் மற்றவை எல்லாம். எனது வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என்பதை நான் பிறக்கும் போதே இறைவன் எழுதி வைத்துவிட்டார்.
நான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால் உடனே காஞ்சீபுரம் சென்று சங்கராச்சாரியாரைத்தான் பார்ப்பேன். ஏனென்றால், அவர்தான் என்னை அதிமுகவில் சேரச் சொன்னார்.
கடந்த பொதுக்கூட்டத்தின்போது, (ஆள் அனுப்பி கூப்பிட்டு) ஜெயலலிதா என்னிடம், நான் இருக்கிறேன் சேகர், கவலைப்படாதீங்க' என்று கூறினார். எனவே, அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பிறகுதான் என்ன செய்யலாம் என்று யோசிப்பேன் என்றார்.
பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் சேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மீண்டும் பாஜகவிலோ அல்லது ஜெயேந்திரர் சொன்னால் திமுகவில் கூட சேருவார் எனத் தெரிகிறது.