செல்போன் கொள்ளையன் எஸ்கேப்-ஏட்டுகள் சஸ்பெண்ட்
சென்னை: சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்போன் கொள்ளையன் தப்பியோடினான். இதுதொடர்பாக இரண்டு ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக செல்போன் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து போலீஸார் இரவு ரோந்தை தீவிரப்படுத்தினர்.
சந்தேகத்தின் பேரில் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போது கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவன் சிவகுமார் (26) என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். செல்போன் கொள்ளையில் சிவக்குமார் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். பல்வேறு பகுதிகளில் சிவகுமார் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
விசாரணையில் கொள்ளையடித்த செல்போன்களை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் விற்றது தெரியவந்தது. சிவக்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்போன்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சிவக்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் நேற்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தி்ல சிவக்குமாரை ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைப்பதற்காக ஏட்டுகள் ராமதாஸ், கிருஷ்ணன் ஆகியோர் பாதுகாப்பில் சிவக்குமாரை ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்டார்.
சைதாப்பேட்டை சிக்னலில் ஆட்டோ திரும்பியபோது ஏட்டுகளை தள்ளிவிட்டு ஆட்டோவில் இருந்து சிவகுமார் குதித்து தப்பியோடினார். போலீஸார் விரட்டிச் சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியில் கவனக் குறைவாக இருந்த 2 ஏட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சேகர் உத்தரவிட்டார். இணை கமிஷனர் பாலசுப்பிரமணி யம் விசாரணை நடத்தினார். இதையடுத்து இரண்டு ஏட்டுகளும் சஸ்பெண்டு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.