இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ்
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
பரமத்திவேலுரில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜகவும் கட்சியும் அதன் தோழமை கட்சிகளும் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்தோடு சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளிலும் இறங்கியுள்ளன. சிறுபான்மையினர் தாக்கப்படுவதை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது.
கூட்டணி, ஆட்சியில் பங்கு போன்ற கொள்கை முடிவுகளை சோனியாதான் முடிவு செய்வார்.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செயற்குழுவில் பேசும்போது தெரிவித்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் ராணுவ மத்திரி ஏ.கே.அந்தோணி பேசி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை (!) சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் வழங்கவில்லை (!!).
சோனியா காந்தியின் அறிவுரைப்படி தகுதி அடிப்படையில் மட்டுமே கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். கோஷ்டி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்றார் தங்கபாலு.