நளினியை விடுவிக்க அரசு திட்டம்: சு.சுவாமி
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1,405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது விசித்திரமாக உள்ளது.
'கைதிகள் பரோலில்தான் சென்றுள்ளனர். தினமும் காவல் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும். அவர்களின் நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். விதிமுறைகளை மீறுவோர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர்' என அட்வகேட் ஜெனரல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதன் மூலம் முதல்வர் கருணாநிதிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கைதிகளில் சில வயதானவர்கள், நல்லவர்கள் மற்றும் விடுதலைக்கு தகுதியானவர்கள் உள்ளனர்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்தவர்கள் (திமுகவினர்) எப்படி விடுதலைக்கு தகுதியானவர்களாக இருக்க முடியும்?.
இது நளினியை விடுதலை செய்வதற்கான திட்டம்தான். ராஜீவ் கொலையாளிகள் பற்றி தனது நிலை குறித்து சோனியா விளக்க வேண்டும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலை இருந்தால் போலீசார் தைரியம் இழப்பார்கள். தீவிரவாதிகள் தைரியமாகிவிடுவர்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா 'சின்ன வீடு' தகுதியை கொடுத்துள்ளது. சின்ன வீட்டுக்கு எல்லா சலுகையும் கிடைக்கும். ஆனால் ஒரிஜினல் மனைவிக்குரிய தகுதி கிடைக்குமா? இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அங்கீகரிக்க வேண்டும் என்றார் சுவாமி.