விபச்சாரம்: கன்னட பிரசாத் மனைவி கைது
சென்னை வளசரவாக்கம் பகுதியி்ல் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ராஜாராம் ஆகியோர் சாதாரண உடைகளில் கார்களில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எஸ்.ஐ. சிவகுமாரிடம் வந்த ஒரு வாலிபர், எனது காருக்குள் விபச்சாரப் பெண்கள் உள்ளனர். ரூ.10,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்தார்.
இதையடுத்து தனது காரை விட்டு இறங்கி அந்த நபரின் காருக்கு சென்றார் சிவக்குமார். அங்கிருந்த பெண்களை தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரை ஆழ்வார் திருநகரில் உள்ள பங்களாவுக்கு வருமாறு அழைத்தார் அந்த வாலிபர். அந்த விலாசத்தை வாங்கிக் கொண்ட எஸ்.ஐ. சிவகுமார், ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் போலீசாருடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டார். அந்த வீட்டுக்குள் 10 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய ஷில்பா என்ற பெண்ணை கைது செய்தனர்.
இந்த ஷில்பா, பிரபல விபச்சார தாதா கன்னட பிரசாத்தின் மனைவி ஆவார். இவருக்கு விமலா, சுதா என்ற பெயர்களும் உண்டு. ஷில்பாவின் சொந்த ஊர் பெங்களூர்.
புரோக்கர்களாக செயல்பட்ட சசின், பிரகாஷ், கிஷோர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
ஷில்பாவிடம் நடத்திய விசாரணையில் வெளி மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த பெண்கள் டெல்லி, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பலிடம் இருந்து கார், 10 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
கன்னட பிரசாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஷில்பா, குசும் உள்பட 3 மனைவிகள் உள்ளனர்.