ஒரிஸ்ஸா: காவல் நிலையம் எரிப்பு-போலீஸ்காரர் கொலை
சில வாரங்களுக்கு முன் கந்தமால் மாவட்டத்தில் விஎச்பியைச் சேர்ந்த சுவாமி லட்சுமானந்தாவை நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொன்றதையடுத்து ஒரிஸ்ஸாவில் பெரும் மதக் கலவரம் மூண்டது. கிருஸ்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். பல சர்ச்சுகளும் சேதப்படுத்தப்பட்டன.
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை கோச்சபாடா என்ற இடத்தின் அருகே கிருஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாயினர்.
இந் நிலையில் நேற்றிரவு துப்பாக்கிகள், வாள்களுடன் ஒரு கும்பல் காவல் நிலையத்தைத் தாக்கி தீ வைத்தது. அங்கிருந்த ஒரு காவலரை சுட்டுக் கொன்றது.
கோவில்கள் மீது தாக்குதல்:
இந் நிலையில் சுரேந்தர்கர்க் மாவட்டத்தில் சக்பாகல் என்ற இடத்தில் ஹனுமார் கோவிலை ஒரு கும்பல் தாக்கியது. கோவிலில் இருந்த சிலையை அந்தக் கும்பல் சேதப்படுத்தியது.
மேலும் பாலிசங்கர் என்ற இடத்தில் இன்னொரு கோவிலுக்கு ஒரு கும்பல் தீ வைக்க முயன்றது. இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியை நிலை நாட்ட அனைத்து மதத்தினர் கொண்ட குழுக்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.