கூட்டணி: பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு: பாஜக
சென்னை: சேலத்தில் 27ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று பாஜக மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கட்சியின் மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகிற 27ம் தேதி சேலத்தில் நடக்கிறது. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை வகிக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அளவில் அமைக்கப்படும் கூட்டணி குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
நாளை நடக்க உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அடிக்கடி தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்படுகிறது. இதற்கு அந்த துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்தான் பதில் சொல்ல வேண்டும்.
பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் சேர்ந்து 200 பாதிரியார்களை கொலை செய்யப் போவதாக எஸ்எம்எஸ் மூலம் வதந்திகளை பரப்புகின்றனர். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினையை விடுதலைப் புலிகளை வைத்து பார்க்காமல் அங்குள்ள தமிழர்களின் உரிமையை வைத்து பார்க்க வேண்டும். அதனடிப்படையில் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தீவிரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று வீரப்ப மொய்லி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றார்.