விஜயன் கொலை: பானுமதிக்கு 3 நாள் போலீஸ் காவல்
சென்னை ராமாவரம் தோட்டத்தில் வசித்து வந்த விஜயன், கடந்த ஜூன் மாதம் கோட்டூர்பூரத்தில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் இது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த விசாரணையில் விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதிதான் கூலிப்படையை ஏவி இந்தக் கொலையைச் செய்தார் என்பது தெரிய வந்தது.
கூலிப்படையின் தலைவராக காவலர் கருணா என்கிற கருணாகரன் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பானு, கருணா உள்பட கும்பலில் இடம் பெற்றிருந்த அனைவரையும் போலீஸார் கூண்டோடு கைது செய்தனர்.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட பானு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பானுமதி, கருணா ஆகியோரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி ைதாப்பேட்டை 23வது பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 10 நாள் காவலில் அனுப்ப வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நேற்று நீதிபதி விஜயக்குமார் உத்தரவைப் பிறப்பித்தார். இதற்காக பானுமதி, கருணா ஆகியோரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையிலிருந்து அழைத்து வந்திருந்தனர்.
நீதிபதி விஜயக்குமார் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸார் என்னை பெங்களூரிலிருந்து அழைத்து வந்து கைது செய்து விட்டனர். போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை என்று நீதிபதியிடம் பானு தெரிவித்தார்.
பின்னர் பானுவையும், கருணாவையும் வருகிற 19ம் தேதி மாலை வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த நீதிபதி அன்று மாலை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.