திமுகவுடன் பாமக, கம்யூ. இல்லாவிட்டால் என்னாகும்? உளவுப் பிரிவு சர்வே!
மதுரை: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக இல்லாவிட்டால் லோக்சபா தேர்தலில் என்ன மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என்பது குறித்து மாநிலஉளவுப் பிரிவு மூலம் ஆளுங்கட்சி ரகசிய சர்வே நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கூட்டணி உத்திகளை வகுக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாம்.
திமுக அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பாமகவை சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டணியை விட்டு வெளியேற்றியது. தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இவர்களும், திமுககூட்டணியில் நீடிக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பாமக விவகாரத்தில் செய்தது போல இன்னும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கூட்டணியை விட்டு வெளியேற்றவில்லை.
இந்த நிலையில் இந்த கட்சிகள் இல்லாமல் லோக்சபா தேர்தலை சந்தித்தால் திமுக அணிக்கு என்ன மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ரகசிய சர்வே ஒன்றுக்கு ஆளுங்கட்சி, மாநில உளவுப் பிரிவுக்கு உத்தவிட்டுள்ளதாம்.
பாமக செல்வாக்குடன் திகழும் வட மாவட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு உள்ள காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ரகசிய சர்வே நடந்து வருகிறதாம்.
இக்கட்சிகள் கூட்டணியில் இல்லாததால் ஏற்படும் சாதக பாதகங்கள், எத்தனை சீட்களில் சிக்கல் நேரிடும் என்பது குறித்து சர்வேயில் முக்கியமாக கண்டறியப்படவுள்ளது.
இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்னாகும், 3வது அணி அமைத்தால் என்னாகும், விஜயகாந்த்துடன் கூட்டணி அமைத்தால் என்னாகும் என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
தமிழக அரசு அறிவித்து வரும் பல்வேறு சலுகைகள், இலவசத் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு உள்ளிட்டவை குறித்தும் சர்வேயில் கணக்கெடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த சர்வேயில் வெளியாகும் முடிவைப் பொறுத்து தேர்தல் உத்திகளை திமுக வகுக்கவுள்ளதாம்.