மின்தடை: ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும் - பாமக
சென்னை: தமிழகத்தை இருளில் மூழ்கடித்து விட்ட மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் மின் தடையைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ெசன்னையில் நடந்த போராட்டத்திற்குக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பாமகவினர் கையில் அரிக்கேன் விளக்குகள், மெழுகுவர்த்தி ஆகியவற்றுடன் வந்திருந்தனர்.
ஜி.கே.மணி பேசுகையில், அமைச்சர் ஆற்காடு வீராசாமி முற்றிலும் செயலிழந்து விட்டார். தற்போது தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலைக்கு ஆற்காடு வீராசாமியே பொறுப்பேற்க வேண்டும். பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.
மின் தடையால்தமிழகமே பெரும் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. மின் உற்பத்தியைப் பெருக்கத் தேவையான திட்டங்களை வகுக்க ஆற்காடு வீராசாமி தவறி விட்டார். மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப திட்டமிடவில்லை. அதனால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.
வணிகர்கள் கடையடைப்பு பிசுபிசுப்பு:
இதற்கிடையே, மின் வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கடையடைப்புப் போராட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லை.
தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டுமே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.