அணு ஒப்பந்தம்: செனட்டில் விவாதம்-கிடைக்குமா அனுமதி?
ஒப்பந்தத்திற்கு ஆதரவாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பலர் சக உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு ெதரிவித்து வருவதால் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது. செனட் அனுமதி அளித்தால்தான் ஒப்பந்தம் அமலுக்கு வரமுடியும்.
தற்போது புஷ் நிர்வாகத்தின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்று செனட் கூட்டம் கூடுகிறது. அதில், இந்திய -அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த கூட்டத் தொடர்வருகிற 26ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் செனட் சபையின் ஒப்புதலை அணு சக்தி ஒப்பந்தம் பெற வேண்டும்.
எனவே ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறுவதில் அதிபர் ஜார்ஜ் புஷ் தீவிரமாக உள்ளார். செனட் சபையில் மொத்தம் 435 எம்.பிக்கள் உள்ளனர். ஒப்பந்தத்திற்கு ஆதரவு தருமாறு கோரி அனைவருக்கும் புஷ் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த பின்னணியில் ஒப்பந்தம் இன்று விவாதத்திற்கு வருகிறது. ஏற்கனவே ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சிலர்இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி தருவதில் அவசரம் காட்டக் கூடாது செனட்டை வலியுறுத்தியுள்ளனர். தங்களது கட்சி உறுப்பினர்களிடமும் அவசரப்பட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்றைய விவாதத்தின் இறுதியில் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசும், ஜார்ஜ் புஷ் நிர்வாகமும் பதைபதைப்பில் உள்ளனர்.
வருகிற 24ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா செல்கிறார். அதற்குள் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்து விடுமா என்ற எதிர்பார்ப்பும்
அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஒப்பந்தத்திற்கு ஆதரவு திரட்டும் வேலையில் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் சிலர் இறங்கியுள்ளனர். தெற்கு கரோலினாவைச் ேசர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி. ஜோ வில்சன் ஒப்பந்தத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடிய ஒப்பந்தம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செனட் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஜோ வில்சன் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார்.
இவர் தவிர ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களான கேரி ஆக்கர்மேன், ஜோசப் கிரவுலி, பிராங்க் பலோன் ஆகியோரும் ஆதரவு கோரி 435 உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இப்படி ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி இருப்பதால் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்து விடுமா என்பதில் தெளிவான நிலை இன்னும் உருவாகவில்லை.