செஞ்சி ராமச்சந்திரன், எல்.ஜி எம்.பி பதவி பறிப்பு?
டெல்லி: லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த சர்ச்சையில் சிக்கியுள்ள எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்களது எம்.பி. பதவியை இழப்பார்கள் எனத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு மெஜாரிட்டி பலத்தை நிரூபிப்பதற்காக பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில், போட்டி ம.தி.மு.க.வை சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன், எல்.எணேசன் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த ஓட்டெடுப்பின்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்,கட்சி கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். இது தொடர்பான புகார்கள் மீது சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி விசாரணை நடத்தி பதவி பறிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளைச் ேசர்ந்த சில எம்.பிக்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் போட்டி மதிமுகவின் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் பதவிகளும் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.
தங்களுக்கு எதிரான புகார் தொடர்பாக போட்டி ம.தி.மு.க.வை சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரனும் எல்.கணேசனும் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து விளக்கம் அளித்தனர். எல்.கணேசன்தான் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் என்றும், அவர் பிறப்பித்த உத்தரவை ம.தி.மு.க. எம்.பி.க்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ணன் இருவரும் மீறிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதேபோல், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மற்றும் பொள்ளாச்சி கிருஷ்ணன் ஆகியோரும் சபாநாயகரை சந்தித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர்.
பின்னர் டெல்லியில் நிருபர்களை சந்தித்த எல்.கணேசன், இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு தங்கள் தரப்பு எம்.பி.க்கள் இருவரும் கட்டுப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், லோக்சபா தேர்தலுக்கு முன்பு பெரும் திரளான தொண்டர்ளுடன் திமுகவில் இணையப் போகிறார்களாம் எல்.கணேசனும், செஞ்சியாரும்.