ராமதாசுடன் பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
ராமதாஸை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயன்று வருவதாகத் தெரிகிறது.
திண்டிவனத்தையடுத்த ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் இந்தச் நடந்தது.
பின்னர் வெளியே வந்த ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையி்ல், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். சொந்த விஷயங்கள் குறித்து பேசிவிட்டு வந்தேன் என்று கூறிவிட்டு மேற்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார்.
ராமதாஸ் பேட்டி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாவை கலைஞர்கள் பாராட்டாமல் முதல்வர் கருணாநிதியை பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், 50 ரூபாய்க்கு ரேஷனில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து பாராட்டப்பட்டுள்ளது.
67 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு கொடுக்கும் திட்டம். 3 விரல்களால் கிள்ளி எடுத்தாலே இந்த பொருட்களின் எடை வந்துவிடும். எடையே போட தேவையில்லை. மக்களை ஏமாற்ற வேண்டும், அவர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
75 கிராம் கடலைபருப்பு எதற்கு பயன்படும். இந்த திட்டத்திற்கு பதில் வேறு உருப்படியான திட்டத்தை செயல்படுத்துங்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். அவைகளை ரேஷன் கடைகளாக மாற்றுங்கள். இந்த ரேஷன் கடைகளில் அனைத்து உணவு மற்றும் காய்கறிகள் பொருட்களை விற்பனை செய்யுங்கள். சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட மானிய பொருட்களை விற்பனை செய்யுங்கள்.
மாநில அரசின் வெப்சைட்டின் அதிகார தகவலின்படி 31.3.08ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 49 லட்சத்து 58 ஆயிரத்து 231 பேர். இவர்களில் 2 லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரப்படுமா?.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைத்தையும் திமுக அரசு பிரசாரம் செய்து வந்துள்ளது. இந்த சாதனைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பலமுறை திமுகவை தேர்தலில் தோற்கடித்து உள்ளனர்.
திமுக அரசு பதவிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளில் ஆடம்பர விழாக்கள் நடத்தி இலவச நிலம் வழங்கினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எங்கும் நிலம் வழங்கப்படவில்லை. அந்தத் திட்டமே முடங்கிப்போய் விட்டது.
சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. மதவாத சக்திகள் மதவாதத்தை தூண்டிவிட்டு ஆதாயம் பெறவேண்டும் என குறுகிய அரசியல் நடத்துவதற்காக சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதும் ஒரு பயங்கரவாதம் தான். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் மத உரிமையும் உள்ளது. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். மற்றவர்களுக்கு மதம் குறித்து போதிப்பதற்கும் நமது அரசியல் சட்டம் உரிமை வழங்கியுள்ளது என்றார் ராமதாஸ்.