For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இசைக்கும்-இருளில் ஒளிரும்: கோ-ஆப்டெக்ஸின் நவீன பட்டுச் சேலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இசைக்கும் மற்றும் இருளில் சென்றால் ஒளிரும் வகையிலான நவீன ரக பட்டுச் சேலையை தமிழக அரசின் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளிக்காக இந்த புது வெரைட்டி பட்டுச் சேலையை கோ ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்கவிழா மற்றும் நவீன வடிவமைப்புகள் கொண்ட சேலைகளின் அறிமுகவிழா நடைபெற்றது.

விழாவுக்கு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலர் விஷ்வநாத் ஷெகாவ்கர் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் ஆர்.ஜெயா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் எம்.பி.நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீபாவளி விற்பனையை தொடங்கிவைத்தார். மேலும், நவீன வடிவமைப்புகளை அறிமுகம் செய்து, கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விளம்பரத்தையும் வெளியிட்டார்.

அதன்பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி விற்பனைக்காக விதவிதமான தீபம் படம் போட்ட பட்டுச்சேலையை அறிமுகம் செய்துள்ளோம். தனியார் கடைகளுடன் போட்டி போடும் விதமாக 1,500 புதிய ரக சேலைகளையும் அறிமுகம் செய்துள்ளோம்.

2 டிசைன்களில் ஒலி - ஒளி சேலை:

சிறப்பு அம்சமாக வண்ண, வண்ண மின்மினி விளக்குகளுடன், இசையை எழுப்பும் வண்ணப் பட்டுச்சேலையையும் அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு ஒலி-ஒளி சேலை என்று பெயரிட்டுள்ளோம்.

இந்த சேலையின் முந்தானை மற்றும் பார்டர்களில் மின்மினி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்மினி விளக்குகள் கொண்ட சேலையும் மற்றொன்று மின்மினி விளக்குகள், இசையை எழுப்பும் கருவி பொருத்திய சேலை என 2 வகையாக சேலைகளை வடிவமைத்துள்ளோம்.

இது பேட்டரியால் இயங்கும் தன்மை கொண்டது. பேட்டரியைப் போட்டால் இசைக்கும், ஒளிரும். மின்மினி விளக்கும், இசையும் தேவையில்லாத நேரத்தில் பேட்டரியை எடுத்து விடலாம். மேலும் சேலையை சலவை செய்யும்போதும் பேட்டரியை எடுத்து விடலாம்.

இந்த சேலையின் விலை ரூ.4,500 ஆகும். இந்த பட்டுச்சேலையை கட்டிச் சென்றால் இருட்டில் சென்றாலும் ஜொலிக்கலாம்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஜனவரி 31-ந்தேதிவரை பருத்தி மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதமும், ரெடிமேடு (ஆயத்த) ஆடைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்றார் ராமச்சந்திரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X