பிஇ: சிறுபான்மையின மாணவர்கள் அதிகரிப்பு-பொன்முடி
திருச்சி: சிறுபான்மையினருக்கான தனி இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவிலான சிறுபான்மையின மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள டாக்டர் கலைஞர் கலை, அறிவியல் கல்லூரியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சிறுபான்மையினருக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின்னர் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஏராளமான முஸ்லீம், கிருஸ்துவ சமுதாய மாணவ, மாணவியர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 610 மாணவ, மாணவியரே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர். இந்த ஆண்டு அது 2,565 ஆக உயர்ந்துள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2005-06ம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 226 மாணவ, மாணவியர் சேர்ந்திருந்தனர். 2007-08ல் இது 6 லட்சத்து 74 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது.
நுழைவுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்ட பின்னர் தமிழக பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர்.
2005-06ல் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருந்தது. இது இந்த ஆண்டு 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 235லிருந்து 353 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது உள்ள 95 ஆயிரம் 808 மாணவர் இடங்கள், ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணமாக ரூ. 32 ஆயிரத்து 500க்கு மாணவ, மாணவியரை சேர்த்துக்கொள்ள பல கல்லூரிகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் உள்ள 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 50 கல்லூரிகள் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டவை ஆகும். கடந்த 2005ம் ஆண்டில் கலை, அறிவியல் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 670 ஆக இருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் இது 860 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை 212லிருந்து 264 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கவும், திருச்சியில் இந்திய நிர்வாகவியல் கழகம் அமைக்கவும், கோவையில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகத்தை வாங்கவும் திமுக அரசு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது என்றார் பொன்முடி.
குறை கூறும் மேதாவிகள்:
முன்னதாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில், ரூ.8.25 கோடி மதிப்பில் புதிய கட்டட திறப்பு, அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பொன்முடி பேசுகையில், தமிழகம் படிப்படியாக வளர்ந்து பொலிவுடன் உள்ளது. கல்வித்துறை வளர்ந்துள்ளது. இருப்பினும் 'படித்த மேதாவிகள்' இத்துறையை குறை கூறுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
பெண் கல்விக்கு முக்கியத்துவம் தந்ததால் பொறியியல் படிப்பில் இந்தாண்டு 31,921 பேர் சேர்ந்துள்ளனர். தமிழ் மீடியத்தில் 35,000 பேர் சேர்ந்துள்ளனர். இது போன்ற வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அரசு நுழைவு தேர்வுமுறையை ரத்து செய்தது தான் என்றார் பொன்முடி.