சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களுக்கு ஜாமீன் இல்லை
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் ராஜரத்தினம், யோக ரத்தினம் மற்றும் சண்முக ராஜா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாயினர். இதையடுத்து மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதலில் கடை மேலாளர் செல்வம் மற்றும் கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரைக் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து உரிமையாளர்களான யோகரத்தினம், ராஜரத்தினம், சண்முகத்துரை ஆகியோர் தலைமறைவானார்கள். இருவரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 3 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தேவதாஸ், 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, செல்வம், ஜெபசிங் ஆகியோர் தாக்கல்செய்த ஜாமீன் மனுக்களை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.