For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்கள் மீது தாக்குதல்: தடையை மீறி ரயில் மறியல்-வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து வரும் 23ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அதன் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் தமிழ் ஈழப் பகுதியில் மனித உரிமைப் பறிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. இலங்கை அரசுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு மறைமுகமாக ராடார் போன்ற கருவிகளை வழங்கி செயல்படுகிறது என்பது போன்ற செய்திகள் வருகின்றன.

வட-கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு உரிய வாழ்வுரிமையை, பாதுகாப்பை அளிப்போம் என்கிற உறுதிமொழியை எங்களுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை இந்திய ராணுவ அமைச்சர் அந்தோணி முன் வைத்துள்ளார்.

இந்திய ராணுவ அமைச்சர், அதுவும் சார்க் நாட்டின் உறுப்பினராக இருக்கக் கூடிய ஒரு பகுதியிலே அவர்களுக்கு மறைமுகமான ஆணையைத் தெரிவிப்பதுபோல, சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால், அங்கு ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக ஆகியிருக்கிறது.

இலங்கை நாட்டு நாடாளுமன்ற தமிழ் எம்.பிக்கள் எங்களைப் போன்றவர்களை வந்து சந்திக்கின்ற போது அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற ஒரு கருத்து, அங்கு இருக்கின்ற மக்களுக்கு உணவு கிடையாது. ஒரு சாதாரண பிஸ்கெட் பாக்கெட் வாங்க ரூ. 35 செலவழிக்க வேண்டும்.

ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.70; ஒரு கிலோ சர்க்கரை ரூ.50 என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. திட்டமிட்டு அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள்.

ஒரு பக்கம் பசி, பஞ்சம், பட்டினி என்று சொல்லக்கூடிய கொடுமை, மறு பக்கம் அகதிகளாக வரலாம் என்று சொன்னால் அதிலேயேயும் கடல் மார்க்கத்திலே சிங்களப் படையினுடைய தாக்குதல்கள். இப்படி பல்வேறு கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் தமிழக மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை ராணுவம் தாக்குகிறது. இதனால் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

எனவே, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து செப்டம்பர் 23ம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X