குஜராத்தில் நானோ?-மோடியுடன் டாடா எம்டி பேச்சு!
அகமதாபாத்: டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரிலிருந்து குஜராத்துக்கு மாற்றுவது தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியுடன் டாடா நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவிகாந்த், குஜராத்தில் நானோ தொழிற்சாலை அமைவதற்குப் பொருத்தமான இடம் குறித்து பேச்சு நடத்தியதாக டாடா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் குஜராத்தின் தொழில் நகரமான முந்த்ராவில் இந்த ஆலையை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ ஆலை தொடர்ந்து செயல்பட முடியாத நிலையை மம்தா பானர்ஜியும் அவரது ஆதரவாளர்களும் ஏற்படுத்தியிருப்பதால், தொழிற்சாலைப் பணிகளை நிறுத்திவிட்ட டாடா, இப்போது ரூ.1 லட்சம் நானோ கார் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் வேலையில் மும்முரமாகிவிட்டது.
இந்நிலையில் 15க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் நானோ ஆலையைத் தொடங்குமாறு டாடாவை அழைத்துள்ளன. குறிப்பாக கர்நாடகம் ரொம்பவே ஆர்வம் காட்டியது.
இதையடுத்து கர்நாடக முதல்வருடன் டாடா மோட்டர்ஸ் எம்டி ரவிகாந்த் பேச்சு நடத்தினார். ஆனால், கர்நாடகத்தி்ல் ஆலையை அமைக்க டாடாவுக்கு ஆர்வமில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இப்போது குஜராத் அரசுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது.
கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள முந்த்ராவில் ஏற்கெனவே டாடாவின் 4000 மெகாவாட் மின் உற்பத்தித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலேயே நானோவுக்கு 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர மோடி அரசு முன்வந்துள்ளது.
முந்த்ரா ஒரு துறைமுக நகரம் என்பதால் இங்கு நானோ ஆலையைத் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறது டாடா.
இத் தொழிற்சாலைக்கு சிங்கூரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, குஜராத்தில் கார் தொழிற்சாலை ஒன்று தொடங்கும்படி ரத்தன் டாடாவிடம் முதல்வர் நரேந்திர மோடி நேரடி கோரிக்கை வைத்திருந்து நினைவிருக்கலாம்.
பிரணாப் முகர்ஜி கருத்து:
இந்நிலையில் டாடா நானோ நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தைவிட்டு முழுமையாக வெளியேற முடிவெடுத்திருப்பது அந்த மாநிலத்துக்கே பெரும் பின்னடைவு என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.