342 கிராமங்களுக்கு குடிநீ்ர் சப்ளை துண்டிப்பு
சேரன்மகாதேவி: நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட 342 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன்கள் பஸ் மோதியதால் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி டவுண் பஞ்சாயத்துகள், மேலத்திடியூர், இளையமுத்தூர், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 5 யூனியங்களை சேர்ந்த 342 கிராமங்களுக்கு பத்தமடை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கூட்டுகுடிநீர் திட்ட பணி 2000ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பத்தமடையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் இருந்து தினமும் 20 மணிநேரம் 70 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. சுமார் 3 லட்சம் மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குழாய் பத்தமடையில் இருந்து நெல்லை செல்லும் பறையர்குளம் வழியாக 38 பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து பாபநாசத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் நிலை தடுமாறி குளத்திற்குள் பாய்ந்தது.
இதில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 34 குழாய்கள் உடைந்து சேதமடைந்தது. கூட்டுகுடிநீர் திட்ட பிரதான குழாய்கள் உடைந்ததால் திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதியிலுள்ள 342 கிராமங்களுக்கும், 2 டவுண் பஞ்சாயத்துகளுக்கும், குடிநீர் விநியோகம் தூண்டிக்கப்பட்டது.
உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.