சிமெண்ட் கடத்தல்-அமுக்கிய அதிமுக எம்எல்ஏ
கரூர்: கரூரில் அரசின் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை கடத்த முயன்றவர்களை அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி நள்ளிரவில் கையும் களவுமாக பிடித்தார்.
கரூர் தொழிற்பேட்டையில் அரசுக்கு சொந்தமான குடோன் உள்ளது. நேற்று இரவு இங்கிருந்து அரசு ஆவணங்கள் எதுவுமின்றி மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர்.
தகவலறிந்த கரூர் அதிமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நள்ளிரவில் அங்கு விரைந்தனர். தனியார் டிராக்டர்களில் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தினார். ஆவணங்களை காண்பிக்கும்படி அவர் கேட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி மலிவு விலை சிமெண்ட் மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், பசுபதிபாளையம் போலீஸாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சிமெண்ட் மூட்டைகளை கடத்த முயன்றவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த திமுக முக்கிய நிர்வாகிகளும் அந்த இடத்திற்கு விரைந்தனர்.