சட்டசபை-லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கலாம்
டெல்லி: நாடுமுழுவதும் உள்ள சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணிகளில் தடங்கல் ஏற்படாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலாம், நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியப்படாத கனவு போல தோன்றும். ஆனால் அரசியல் தலைவர்கள் மனது வைத்தால் இது நிச்சயம் கிடைக்கும்.
ஆண்டு முழுவதும் தேர்தல் நடக்கும் சூழலில் தற்போது நாடு உள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி இருந்தால் எப்படி நாட்டின் வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியும்.
எனவே சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாட்டை நாம் உருவாக்குவது அவசியம் என்றார் கலாம்.